Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

திங்கள், 27 நவம்பர், 2017

இனி எம் கல்லறைகளுடன் பேசுக!



எம் இருதயத்தை பிளந்த
யுத்தக் கல்லை பார்த்ததுபோதும்
எமை கொன்று வீசிவிட்டு
வெற்றிக் கூச்சலிடும்
உம் படைவீரரின் சிலையை பார்த்ததுபோதும்
எம் தேசமழித்து
அழிக்கப்பட்ட எம் உடல்களின்மேலே
ஒற்றை நாடென நடனமாடும்
வரைபட கல்லைப் பார்த்ததுபோதும்.
எம் வீரர்கள் விதைக்கப்பட்ட நிலத்திற்கு
வருகவெம் சிங்களச் சகோதரர்களே!
வந்தெம் முகங்களின் காயங்களைப் பார்க்கவும்
நூற்றாண்டாய் எம் தலைகளை அழுத்திய
பெரும் பாதங்களின் வீரத்தைப் பார்க்கவும்
மனிதம் தலைகுனிய கல்லறைகளுடன்
போர் புரிந்த உம் படைகளின் தீரத்தைப் பார்க்கவும்
மாண்டவர்களின் துயில் கலைத்து
உறங்க இடமறுத்த மாண்பை பார்க்கவும்
சற்று அமர்ந்தே
எங்கள் கல்லறைகளுடன்
பேசுக எம் சிங்கள சகோதரிகளே!
உடைபட்ட கல்லறையின் துகளொவ்வொன்றும்
எம் தாகம் எடுத்துரைக்கும்
எம் தலைமுறையின் கனவைச் சுமந்திருக்கும்

-தீபச்செல்வன்


செவ்வாய், 21 நவம்பர், 2017

கத்தலோனியா மூதாட்டி






தங்க நகரமெங்கும்
இறைதூதர்கள் பொரகோ மலர்களைத் தூவ
சுதந்திர தேசப் பிரகடனம் நிகழ்த்தப்படுகையில்
புன்னகை நிரம்பி இருதயம் வெடித்த அந்த மூதாட்டி,
முன்பொருநாள், 'மகளே! கண்ணுக்கு தெரியாத
யுத்தத்தினால் நாம் நிர்மூலம் செய்யப்படுகிறோம்!' என
தன் பிள்ளைகளுக்குச் சொன்னாள்.

'எம்மிடம் இருப்பது பிரிக்க முடியாத நாட்டுக்கான சாசனம்' என
ஸ்பெயின் பிரதமர் தொலைக்காட்சியில் உரையாற்றுகையில்
பர்சலோனா நகரைப்போல பளபளக்கும் கன்னங்களுடன்
துடிதுடிப்பாக திரியும் அந்த மூதாட்டி
'மகனே! நமது கூழாங்கற்களை திருடி ருசிப்பட்டவர்கள்
சுதந்திரத்தை பிரிவினை என்று நம் விழிகளை மறைப்பார்கள்!' என
தன் பிள்ளைகளுக்கு சொன்னாள்.

'இனி ஒருபோதும் உங்கள் பாடல்களைப் பாட முடியாது' என்ற
ஸ்பானிய அரசனின் வார்த்தைகளை எழுதிய
பழைய நாட்குறிப்பை தன் கைப்பையில் வைத்திருந்த அந்த மூதாட்டி
'மகளே! மாண்டுபோன பின்னர் எழும் நினைவுக்கல்லில்
எழுதுவதற்கு மாத்திரம் உரியதல்ல எம் தாய்மொழி!' என
தன் பிள்ளைகளுக்கு சொன்னாள்.

'இனி உலகில் ஒரு நாடு சாத்தியமில்லை' என
பிலிப் மன்னன் எக்காளமிடுகையில்
பொக்கை வாய் நிறைய சிரித்த அந்த மூதாட்டி
'மகனே! வஞ்சிப்பவர்களின் கைகளில்
ஐக்கியத்தின் வாசனை இருப்பதில்லை
நம்முடைய பூர்வீக இராட்சியமே பாரபட்சத்தின் முடிவு!' என
தன் பிள்ளைகளுக்கு சொன்னாள்.

சுதந்திரத்தைத் தவிர
எதனாலும் பெறமுடியாத புன்னகைகயை கொண்டிருக்கும்
ஒவ்வொரு கத்தலோனிய முகங்களிலும்
இன்னும் துடிதுடிப்போடு திரியும் அந்த மூதாட்டி
'புதல்வர்ககளே! நாம் ஸ்பானியர் அல்ல, கத்தலோனியர்
என்பதை வரலாறு மறந்து போனால்
உம் குழந்தைகளின் பெயர் அகதி என்றே முடியும்' என
தன் பிள்ளைகளுக்கு சொன்னாள்.


♢ தீபச்செல்வன்

நன்றி: கல்கி

ஞாயிறு, 22 அக்டோபர், 2017

வீர நாய்கள்



எனது வீதிகளில் தடுத்து நிறுத்தி
மேற்கொள்ளும் எல்லா விசாரணைகளையும்
அழைக்கப்படும்போதெல்லாம்
சென்று வாக்குமூலங்கள் அளிப்பதையும்
எனது வீடுகளில் எந்த வேளையிலும்
சோதனைகள் நடத்துவதையும்
அந்நியத்தை உணர்த்தும் தேசிய கீதத்தை கேட்டபடி
என்னைப் பிரதிபலிக்கா கொடியின் முன்பாய் நிற்கவும்
எனது மொழி தவறாய் எழுதப்படும்போதும்
எனது வரலாறு தவறாக பேசப்படும்போதும்
எனது தோழி குளிப்பதை இராணுவச் சிப்பாய் ஒருவன்
பார்த்துச்செல்லும்போதும்
துஷ்பிரயோகிக்கப்பட்ட யாரோ ஒரு குழந்தையின்
மரணத்தின் சந்தேகத்தையும்
இன்னுமின்னும் எல்லாவற்றையும்
சகிக்கப்பழகிவிட்டேன்
எத்தனையோ தடவை ரோந்து சென்றுவிட்ட பின்னும்
இராணுவத்தைப் பார்த்து குரைக்கும்
என் வீட்டு நாயிற்க்குத்தான்
இன்னும் சகிக்கத் தெரியவில்லை.

தீபச்செல்வன்

நன்றி: குங்குமம்

செவ்வாய், 10 அக்டோபர், 2017

லெப்டினன் மாலதி


பள்ளி அப்பியாச புத்தகங்களின்
நடுவில் வீரப் படத்தை வைத்து
சிறுவர்கள் உருகியழைக்கும்
மாலதி அக்கா

ஈழ வீர மகள் அவள் பேசிக்கொண்டிருக்கவில்லை
உன்னைப் போல் கல்லாயிருக்கவில்லை
எழுந்தாள் தேசம் காக்க
தரித்தாள் ஆயுதம்

கோப்பாய் வெளியில் காயவில்லை அவள் குருதி
தொண்டைக்குழியில் நஞ்சு
'என் துப்பாக்கியை எடுத்துச் செல்லுங்கள்!'
என்றுரைத்த அவள் இறுதிக் குரல்
இன்னும் ஓயவில்லை

போருக்குத் தீர்வு காண வந்தவும் படைகள்
தொடுத்தனர் போர்
அழிப்புக்கு அமைதிகாண வந்தவும் படைகள்
அழித்தனர் எமை

பாரத மாதாவே நீர் கல்லாயிருந்தீர்
களத்தில் அவள் மாண்டுபோகையில்

உம் கைகளிலிருந்த துப்பாக்கிகளில்
அசோகச் சக்கரம்
அமைதிப் படைகளின் முகத்திரையை
கிழித்தெறிந்தாள் முதல் சுடுகலனில்

வானமே கரைந்துருக
பூமியின் கண்களை நனைத்து
தாய் மண்ணை முத்தமிட்டது
முதல் விதை.
0

தீபச்செல்வன்

10.10.1987 தேசத்தின் விடுதலைக் கனவை சுமந்து ஆயுதம் ஏந்திக் களம் சென்று போரிட்டு மாண்ட மாலதி என்று அழைக்கப்படும் சகாயசீலி பேதுருப்பிள்ளை என்ற முதல் பெண் புலிக்காய்.

திங்கள், 2 அக்டோபர், 2017

குர்து மலைகள்


பெண் கொரில்லாக்கள்
ஏந்தியிருக்கும் கொடியில்
புன்னகைக்கும் சூரியனின் ஒளி
அக்ரா நகரெங்கும் பிரகாசிக்க
ஜூடி மலையிலிருந்து
மிக நெருக்கமாகவே கேட்கிறது
சுதந்திரத்தை அறிவிக்கும்
குர்துச் சிறுவனின் குரல்

போர்க்களத்தில் மாண்டுபோன கணவனுக்காக
யூப்ரட் நதியிருகே
ஒலீவ மரம்போல்
காத்திருக்கும் பெண் ஒருத்தி
இனி அவன் கல்லறைக்கு
கண்ணீருடன் செல்லாள்

ஓய்வற்ற இக்ரிஸ் நதிபோல
தலைமுறை தோறும்
விடுதலை கனவை சுமந்து
சுதந்திரத்தை வென்ற
உம் இருதயங்களில் பூத்திருக்கும்
பிரிட்டில்லா மலர்களின் வாசனையை
நான் நுகர்கிறேன்

குருதி ஊறிய
குர்து மலைகளே
உமது தேசம் போல்
எமது தேசமும் ஒர்நாள் விடியும்
எமது கைகளிலும் கொடி அசையும்
கோணமலையிலிருந்து உமக்குக் கேட்கும்
எமது சுதந்திரத்தை அறிவிக்கும்
ஈழச் சிறுவரின் குரல்

லினுஸ் மலர்களை அணைப்பதைப்போல
எமது கொடியினை ஏந்தி
எம் கனவை உம் விழிகளிலும்
எம் தாகத்தை உம் இருதயத்திலும்
சுமந்த மலைகளே
இறுக்கமாகப் பற்றுகிறோம்
எம் நிலத்தின் விடுதலையை
எதிர்பார்த்திருக்கும் உமது தோள்களை.

ஒரு போராளியின்
இறுதிப் பார்வைபோல
திடமானது நம் சுதந்திரம்
கொரில்லாக்களைப் போன்ற குர்து மலைகள்
உமக்குத் தோழமை
நீரோ எமக்குத் தோழமை
குர்து மலைகளைப் போலவே
புனிதமானது நமது விடுதலை.

●தீபச்செல்வன்

நன்றி: குளோபல் தமிழ் செய்திகள்

சனி, 19 ஆகஸ்ட், 2017

கடல் மகள்




தாமரைபோல் விரியும் அலைகளை
கண்களில் கொண்ட கடற்கன்னி
தம்மை விடவும்
வேகமாய் நீந்தி புன்னகையுடன்
வெடிக்கையில்
கலங்கின மீன்கள்

யாருக்கும் அஞ்சா ஈழக் கடலே
ஓர் ஏழைத் தாய் பெற்ற வீர மகள்
உனக்காய் வெடிசுமந்தாள்
உன்னில் புதைந்தாள்
புத்திர சோகத்தால் உடைந்த தசரதன்போல்
விம்மிற்றுக் காங்கேசன்துறை

தீவை விழுங்க வந்த பருந்தின்
கால்களை முறித்தாள் அங்கயற்கண்ணி
தாயாய் உருகியது வேலணை

இலக்கை தகர்க்காது
திரும்பேன் எனப் போர்க்கோலம் பூண்டவள்
கடலோடு கலந்துபோகையில்
சீறிய அலைகளும்
கரைந்து புரண்டன

நுணலை விழுங்கும் சர்ப்பம்போல
கடலினை குடிக்க வந்த எதிரியின் படகை
கரைத்து
கடலுக்கு முத்தமிட்டாள் அங்கயற்கண்ணி
கடல் அணைத்தது தன் மகளை.
0

அங்கயற்கன்னிக்காய்
தீபச்செல்வன் 

வியாழன், 8 ஜூன், 2017

தீபச்செல்வன் கவிதைகள்



01. அம்மாவைப்போல

மாத்திரைகளை மென்று
ஊசி மருந்துகளை ஏற்றி
கருத் தங்குமென
காத்திருப்பவளின் மார்ப்பு சுரந்தது
யாரோ ஒரு குழந்தையைக் கண்டு

வீதியில் செல்லும் எல்லாக் குழந்தைகளையும்
தன் குழந்தைாய் தலை தடவுகிறாள்
வாடகை தாயாகி கருப்பை இழந்தவள்

கண்களில் நீர் அண்டாதபடி
செல்லமாய் பேசி
தெருவில் மீட்ட குழந்தையின்
அனாதரவை மறக்க செய்கிறாள் தாயொருத்தி

பிள்ளைகள் இல்லா வீட்டில்
ஒருவருக்கொருவர் குழந்தையாகி
சண்டையிட்டு விளையாடினர்
முதிர்ந்த தம்பதியர்

நாட்டிற்காய் மாண்டுபோன
பிள்ளையை எண்ணி
பசுக் கன்றை முத்தமிடுகிறாள்
போருக்குப் பிள்ளையை அனுப்பியவள்

பிரியமிகு நண்பனே!
உடல் வருந்தி மாத்திரம்
உறவுகளைப் பெறுவதில்லை

யுத்தம் தின்றவுன் அம்மாவைப்போல
நான் இருப்பேன்
இனிக் கலங்கா உன் விழிகளில்
உயிர் வருந்தும் உறவாய்.
0

02. எனக்குப் பின்னால்
ஒரு நண்பன் இருக்கிறான்


பெருங்கடலை கடப்பதும்
பெரு வானில் பறப்பதும்
எளிதுதான்
தீ மலைகளை சுமப்பதும்
பனிக் காட்டில் நனைவதும்
எளிதுதான்
என் ஜனங்களின் காவியத்தையும்
எழுதியிராத எல்லாக் கவிதைகளையும்
எழுதும் எழுதுகோலைப்போல
எனக்குப் பின்னால்
ஒரு நண்பன் இருக்கிறான்
0

03. பிரசுரம் ஆகியிராத கவிதை

எப்போதும் விலகியிராத
மஞ்சள் ஒளி மிகுந்த மாலை
உதிர்ந்த மாவிலைகளின் சித்திரம்
இரண்டு தேனீர்க் கிண்ணங்கள்
மாத்திரைப் பெட்டிகள்
வெகுதூரம் சென்றுவிட்ட
காதலியின் நினைவுகள்போலப்
பறந்து திரியும்
வண்ணத்துப் பூச்சிகள்
நண்பா! எஞ்சியிருப்பது
புத்தகங்கள் நிரம்பிய வீடு
பிரசுரம் ஆகியிராத ஒரு கவிதை
உன் தோழமை

04. பயங்கரவாதியின் நண்பன்

நட்சத்திரங்களின் பானத்தை அருந்திவிட்டு
ஒளி வியர்க்க நான் திரும்பவில்லை
விலங்கிடப்பட்ட கைகளில் குருதி பிசுபிசுக்க
கவிதையிலிருந்து திரும்பினேன்

வாள் முனையில் சொருகப்பட்ட
இருதயம் முட்ட
அழிக்கப்பட்டவர்களின் குரல்களுடன்

நிலவு விரட்டப்பட்ட இராத்திரி
தனியொருவனுடன் செல்லும் பேருந்து
திரும்ப இயலா யாருமற்ற நெடு வழி
பூட்டப்பட்ட கதவுகள்

எனினும் நண்பா நீ உடனிருந்தாய்
சனங்களுக்காய் எழுதியதனால்
பயங்கரவாதி என
குற்றம் சுமத்தப்பட்ட கவிஞனுடன்
பின் தொடரும் நிழலாய்.

05. ஒரு கவிஞனுக்கு காதலியாய் இருப்பது

நெடுந்தூரப் பயணங்கள்
நேரம் தவறிய உணவு
கவனிக்காத உடல்
மழிக்காத கன்னங்கள்
வாரப்படாத முடி
கண்ணாடி பார்க்காத முகம்
தேனீரில் கரைந்த நாட்கள்
வீட்டை மறந்த பொழுதுகள்
வருமானமற்ற பிழைப்பு
உடமையற்ற வாழ்வு
எப்போதும் கவிதையில் மூழ்கிய மனம்
விடுதலை பற்றிய கனவு
புத்தகங்களுடனான இரவுகள்
இயல்பற்ற நிலை
துப்பாக்கியின் குறிக்குள் இலக்கிடப்பட்ட
தன்னை மறந்த
ஒரு கவிஞனுக்கு
காதலியாய் இருப்பது
வெகு சுலபமில்லை

நன்றி: தீராநதி ஜூன் 2017

வெள்ளி, 17 மார்ச், 2017

பூமி


கேட்டினால் மேவிப் பெருகிய பாலியாற்றைப்போல
பேராராய்ப் பெருக்கெடுத்த நம் குருதி
உதுமானியப் பேரரசின் சிறைகளுக்குள்
சிந்தப்பட்ட ஆர்மீனியரின் குருதி

வற்றி வறண்ட நெடிய சமுத்திரம்போல்
புழுதியாய் கிளம்பி நமக்கெடுத்த தாகம்
பாலைவனங்களில் கருகிய
தார்பூரரின் தாகம்

தணல் மூண்ட பெருங்காடுபோல்
தீயாய் நாம்மை துவட்டிய பசி
பட்டினியோடு மூச்சடங்கிய
கம்போடிய வியட்நாயிமரின் பசி

தலை அறுக்கப்பட்ட பறவைபோல்
அனல் படரத் துடித்த நம் வயிறு
பசியால் மடிந்த
உக்கிரேனியரின் ஒட்டிச்சுருங்கிய வயிறு

விசமேற்றி இறந்த மீன்களின் மூடா விழிகள்போல்
நஞ்சுறைந்து வாடிய நம் இருதயம்
நாஸிகளின் விஷ வாயுவால் முட்டி வெடித்த
யூதர்களின் இருதயம்

கிழிந்த செவ்வரத்தம் பூக்கள்போல்
விந்துக்கரை படிய குதறி வன்புணரப்பட்ட நம் யோனிகள்
உகூட்டு ஆண்குறிகள் பிய்த்தெறிந்து
குருதி உறிஞ்சிய
ருவாண்டா துட்சிகளின் யோனிகள்

எனதன்பு மகளே!
எல்லா வழிகளாலும் அழிக்கப்பட்டவர்களின்
இப் பூமியில்தான்
உன்னைப் போலவே
மீண்டெழுந்தவர்களும் உண்டு.
¤

தீபச்செல்வன்

நன்றி குங்குமம் 17.03.2017

ஞாயிறு, 12 மார்ச், 2017

வர்ணப் பட்டதாரி



சிலந்திகள் கூடு கட்டி
கரப்பொத்தான்கள் குடியிருக்கின்றன
பட்டத் தொப்பியில்

தூசி பிடித்துக் கிடக்கிறது
பட்டச்சான்றிதழ்

பிரதியெடுத்து
களைத்துப்போய்க்கிடக்கிறது
பெறுபேற்றுப் பத்திரங்கள்

வாசிக்கப்படாதிருக்கும்
சுயவிபரத்துடன்
இனி சேர்த்துக்கொள்ளலாம்
சுவருக்கு வர்ணம் பூசும்
அனுபவத்தையும்

நாட்கூலி செய்து
பல்கலைக்கழகம் அனுப்பிய பிள்ளை
நாட்கூலியுடன்
வீடு திரும்புவதை
பார்திருக்கும் வயதான தந்தைக்கு
அதிகரித்தது நெஞ்சுவலி

தோய்த்து அயன் செய்து
மடிப்புக்குலையாமலிருக்கும் மேற்சட்டையை
பார்த்தடியிருக்கும் தாய்
சீமெந்துத் தூள்களுடன்
சோற்றைக் குழைத்து உண்ணும் பிள்ளையை
நினைத்துப் பசிகிடந்தாள்

சுவருக்கு வர்ணம் பூசும்
ஒரு பட்டதாரியின்
உடலில் சிந்திய வர்ணங்கள் 
வரைந்தது வேலையற்ற வாழ்வை

-தீபச்செல்வன்

புதன், 8 மார்ச், 2017

வற்றாப்பளை கண்ணகி வழக்குரை காதை



01
வண்டில் பூட்டி வந்து
வயல் வெளியிலிருந்து
கோவில் முற்றத்தில் பானை வைத்து
பாற்பொங்கலிட்டு
விடியும் பொழுதுவரை
கடல் நீரில் எரியுமுன் விளக்கின் ஒளியில்
முகம் பரப்பியிருக்க
ஏழு கன்னியரிலொருத்திபோலான என் தோழி 
இம்முறையும் திரும்பவில்லை

குருதியூறி ஓலங்களால் நிரம்பிய 
இதேபோலொரு வைகாசியில் 
அவள் காணாமற் போனதும் இவ்வெளியிற்தான்

சுடுமணல்போல் இருதயம் தகித்துக் கிடக்க
இருண்ட தாழைமரங்களுக்குள் 
கேட்கும் ஒற்றைக்குரல்கள்
அவள் குறித்தொரு இரகசியமும் சொல்லவில்லை

உடைந்த குரலில் ஆயிரம் கண்கள் கசிய
தனித்தலைபவனின் காலடிகளைத்
தொடரும் நாரைகளும் 
மௌனம் கலைத்தேதும் பேசவில்லை

02
அன்று உன் முன்னே  
குழந்தைகளை துரத்திச் சுட்டழித்த
ஹெலிகெப்டர்கள் இன்றுன்மீது 
குருதி மொச்சையடிக்கும் பூக்களை 
வீசக் கண்டு சிவக்கின்றனவுன் கருங்கண்கள் 

பண்டார வன்னியன் படைவெல்கையில்
கண்களால் நகைத்த வன்னித் தாய்
ஓயாத அலைகளில் குதூகலித்தாளெனப் பாடிய 
இடைச்சிறுவன் தொலைந்ததும் இக்கடலில்தான்

நீதிக்காய் மதுரையை எரித்து
கோபத்தை தணிக்க நீ வந்துறைந்த
வற்றாக் கடலில் 
நம் பிணங்கள் மிதக்கையில்
எப்போதும் நகைக்கும் உன் தாமரை கண்கள் 
வெகுண்டு துடித்தனவாம்

உன் முன் எதிரி எமை கொன்று வீசுகையில்
புன்னிச்சை காய்களால் 
பறங்கித்துரையை துரத்தியபோல்
பகைவரைத் துரத்தியிருந்தாலென்ன?
உன் முன் எமைநோக்கி எதிரிகள் குண்டெறிந்தபோது
கள்வரின் கண்களை மறைத்ததுபோல்
பகைவர் கண்களைக் குருடாக்கியிருந்தாலென்ன? 

நீ மட்டுமே பார்த்திருந்தாய்
அடிமையை எதிர்த்தவெம் முதுகுகளை கூனச் செய்தனர்
எம் வானத்துச் சூரியனை வீழ்ந்துருகச் செய்தனர்
எம் நட்சத்திரங்களைக் கருக்கினர்
உன் பூர்வீக ஜனங்களை நாடற்றவர்களாக்கினர்

நீ மட்டுமே பார்த்திருந்தாய்
கைப்பற்றிய என் குழந்தைகளை
யுத்த வெற்றிப் பொருட்களாய் காட்சியப்படுத்தியதை
சரணடைந்த என் சனங்களை
இன்னொரு தேச அடிமைகளாய் துன்புறுருத்தியதை
வெள்ளைக் கொடி ஏந்திய என் போராளிகளின் மார்பில்
துப்பாக்கிகளால் துளையிட்டதை 

மாபெரும் தாகம் நிரம்பிய நம் குரல் 
உன் முன்பேதான் கரைக்கப்பட்டது
மாபெரும் தகிப்போடிருந்த நம் கனவு 
உன் முன்பேதான் புதைக்கப்பட்டது. 

உன் தலைவன் கோவலனை கொலை செய்கையில் 
நீயடைந்த ஆற்றாத் துயரம்போல்
பாண்டிய மன்னனை தேடிச்செல்கையில் 
நீயடைந்த வெஞ்சினம்போல்
உன் கணவன் குற்றமற்றவன் என வெகுண்டழுந்து
நீ உடைத்தெறிந்த பொற்ச் சிலம்புபோல்
நீதிக்காய் ஆவேசத்துடன் 
கொதித்துச் சிதறிய மாணிக்கப் பரல்கள்போல்
புன்னகை கழன்று கண்ணீர் பிரவாகித்து 
பெருங்கடலானவுன் கண்களைப் போல்
பொங்கி வழியுமொரு
வைகாசி விசாகப் பொங்கல் போல்
ஊதி வெடிக்கின்றன நம் இருதயங்கள்

03
முள்ளிவாய்க்காலெதிரே
நந்திக்கடலோரமிருந்து 
ஆயிரங்கண்களால் 
யவாற்றையும் பார்த்திருந்த சாட்சியே
நீ கண்டிருப்பாய்
என் காதலி என்ன ஆனாளென?

ஆடுகளுமற்று 
பாற்புக்கை காய்ச்சி
உன் தலையில் பேனெடுக்கும் 
இடைச் சிறுவர்களுமற்றிருக்கும் நந்திவெளியில் 
நூற்றாண்டுகளாய்த் தனிமையிருக்குமுன் போல்
திரும்பி வராத தோழிக்காய் உழல்கிறேன்

நீதிக்காய் வழக்குரைத்து
நெடுஞ்செழியனை நடுங்கச்செய்து
அநீதியை சாம்பாலாக்கிய நந்திக்கடலரசியே
காணமற்போன என் காதல்  தோழியை மீட்க
முல்லைக் கடல் பட்டின
அநீதிச் சபைக்கு வந்தொரு வழக்குரைப்பாயா? 
¤

தீபச்செல்வன்

பண்டார வன்னியன்:  வெள்ளையருக்கு எதிராக போரிட்ட வன்னி அரசன். ஓயாத அலைகள்: இலங்கை இராணுவத்தை தோற்கடித்து முல்லைத்தீவை கைபற்றிய விடுதலைப் புலிகளின் இராணுவ நடவடிக்கை. வற்றாப்பளை: மதுரையை எரித்த பின்னர் கண்ணகி ஈழத்தில் வன்னியில் வந்து இறுதியாக தங்கிய ஊராக நம்பப்படுகிறது. இது ஈழ இறுதி யுத்தம் நடந்த முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்கால் அருகிலும் நந்திக்கடல் வெளியிலும் உள்ளது. 

நன்றி: குமுதம் 'தீராநதி' பங்குனி 2017

வெள்ளி, 3 மார்ச், 2017

பேனா நண்பன்





கடல் அலை நுரைகளில் திரளும் நினைவுகளை
கொத்தி செல்கின்றன
சிறகடித்தெழும் கடற்பறவைகள்

இப்படி ஒரு கடற்ரைக்காக
ஒரு கிண்ணம் மதுவுக்காக
ஒரு உரையடாலுக்காக
ஒரு வயிறு குலுங்கும் பகிடிக்காக
நீ திரும்பியிருக்கும் ஒரு பொழுதுக்காக
ஒரு பேனாவைத் திருடிக்கொள்ளலாம்

மீண்டுமொரு நாள்
பாதியுடைந்த பள்ளிக்கூட வகுப்பறையில்
படிக்க முடியுமெனில்
ஒரு மேசையில்
புத்தகங்களை பரப்பி வைக்க முடியுமெனில்
கதிரையின் பின் பக்கமாக
புத்தகப் பையை கொளுவி வைக்கலாமெனில்
மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அருகேயிருந்த
உன் வீட்டுக்கு கையசைத்துச் செல்லலாமெனில்
ஒரு பேனாவைத் திருடிக்கொள்ளலாம்

அன்று நான் உனது பேனாவைத் திருடவில்லை

யாரோ திருடினர்
நமது பால்யத்தை
நமது வகுப்பறையை
நமது நகரத்தை

எந்தப் பேனாவாலும்
எழுதி முடிக்கவியலாத
பிரிவுகளால் சிதறுண்டோம்

பாடக்குறிப்புப் புத்தகங்களில் அலையும்
பால்யத்தின் பாடல்களை
யாரோ சில சிறுவர்கள் இசைக்கின்றனர்
காயப்பட்ட வகுப்பறையில்

அன்று நான் திருடியதாக
நீ பறித்துக்கொண்டது எனது பேனா
அப்படியெனில்
உனது பேனாவை திருடியவன் யார்?

மறுபடியும் ஒரு இலையுதிர்காலத்தில்
தாய்மண்ணுக்கு வருகையில்
உன்னை என் நண்பனாக்கிய
அந்த நண்பனைத் தேடுவோம்!

தீரா மையோடிருக்கும் அந்தப் பேனா
யாரிடமுள்ளது?

அன்றைய பேனாச் சண்டையில்
கிழிந்துபோன பள்ளிச் சட்டையில்
காணாமல் போன உனது போனா
எழுதிவிட்டது ஒரு கனவுக்காலத்தை

தீபச்செல்வன்
2013

பள்ளித் தோழன் சுமனுக்கு
நன்றி - கரை எழில் 2014

செவ்வாய், 28 பிப்ரவரி, 2017

தேசியப் பாடகன்



இன்றும்
எதிரிகள் உனது குரலுக்கு அஞ்சினர்
எதிரிகள் உனது பாடல்களுக்கு அஞ்சினர்

ஆனாலும்
இருதயம் வெடித்து முழங்கின
வீர யுகமொன்றில் நீ இசைத்த பாடல்கள்

உள்ளே நெருப்பெரியும் குரலில்
தாய் மண்ணை நிறைத்த
தேசியப் பாடகன் செல்கிறான்
தொலை தூரத்திலிருந்து
தேசத்தின் பாடலை இசைக்க.

குரலற்றவர்களின் பாடலைப் புதைத்தோம்
மாபெரும் தாகம் நிரம்பிய மண்ணில். 

சாந்தனுக்கு

தீபச்செல்வன்

சனி, 18 பிப்ரவரி, 2017

Keppapilavu/ கேப்பாபுலவு/ ஆங்கிலத்தில்/ க. வாசுதேவன்


------------------------------------------
***
In the past, my country was made of the sea,
And now it is made of the army.
Military camps set up on the remains of my past
Are made of the materials of my dwelling.

With the bow made of the stretched stick of the Portia tree,
Near Nanthikadal which never fell,
The boy from Keppapulavu pulls
Towards the military camp

The dew and the sun have devoured
The beautiful smile of children.
However, as well as faded flowers,
They sleep in the hanging cradles,
Surrounded by invaders

Our wrathful women are insurgent
Without fearing the guns
As well as the Goddess Kannaki of Vattapolai
And lyric characters of poems written by fighters

Our children who forgot to go to school learned
And sang the songs on Keppapilavu,
So they learned what they can not learn anywhere.

Oh ! You, the enemy regiment of invasion,
Leave our lands which you have taken possession of!
May my country be surrounded by the sea, and, in a part, by land!

(first attempt )

Ather : Theepachelvan
Translation : K. Vasudevan

வெள்ளி, 10 பிப்ரவரி, 2017

பூவரசம் பூ!



குருதி நிணம் தீரா மண்
பிணங்களும் எஞ்சாத தேசம்
சிதைமேடுகள் மீதும் துப்பாக்கி
சிதலுறூம் காயம்

இராணுவ சப்பாத்துக்களின்
கீழ் எல்லாமும்

ஆனாலும் எழுந்தது தேசம்
அதனாலும் எழுந்தது தேசம்
சிறகுடைத்து வீசப்பட்ட
ஒரு பறவையின்
சிறகசைப்பைப்போல

கால்களற்றவரும் நடந்தனர் தெருவில்
கைகளற்றவரும் ஏந்தினர் கொடியை
விழிகளற்றவரும் ஏற்றினர் சுடரை
சொற்களற்றவரும் எழுதினர் பதாகையை
இல்லாதவர்களின் இருதயங்களைச் சுமந்து

தொண்டைக் குழிகளில்
நெடுநாளுறைந்த
பெருங்குரல்
காட்டாற்றைப்போலப் பெருக

இப்போதும்
வீழ்த்தப்பட்டவர்களின்
பெருஞ்சொற்களில் கனன்றது
வாழ்வின் கனவுதான்
பிரளயம் கடந்து
ஊழி கடந்து
அகல விரிந்து பூத்த
பூவரசம் பூப்போல.

¤

தீபச்செல்வன்

நன்றி: குளோபல் தமிழ் செய்திகள்

செவ்வாய், 31 ஜனவரி, 2017

இராணுவமுகாங்களுக்குள் எனது வீடு



புதர் மண்டிய இருண்ட சமூத்திரத்தின்
மேற்பரப்புப்போல
இறுகத் தாழிடப்பட்ட என் கதவுகளை
சூரியன் ஒருபோதும் தட்டியதில்லை
இராணுவமுகாங்களுக்குள் எனது வீடு

அழிக்கப்பட்ட குடி நிலத்தின் வரைபடம்போல
தழும்புடல்களைக் கொண்டவென்
சிறுவர்கள் எவரும்
பள்ளிப் பேருந்தின் சாளரங்களைத் திறப்பதில்லை
யுத்த டாங்கிகளுக்குள் எனது வீதி

நூற்றாண்டுகளாய் மண்ணுள் புதைக்கப்பட்டாற்போல
உருவழிக்கப்பட்டுப் புன்னகை இழந்த
நம் புரதான நகருக்கு
எப் பறவைகளும் வருவதில்லை
காவலரண்களுக்குள் எனது நகரம்

வாய் பிளந்த பீரங்கிக்குள் இருக்கும்
பதுங்குகுழியைப் போலான தேசத்தில்
எப் பாடல்களும் கேட்பதில்லை
சோதனைச் சாவடிகளுக்குள் எனது நாடு.
0

தீபச்செல்வன்

நன்றி - நக்கீரன்

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...