Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

சனி, 27 பிப்ரவரி, 2010

அம்மா மீளவும் ஒரு திகதி அறிவித்திருக்கிறாள்

o தீபச்செல்வன் ------------------------------------------------------------------


நாட்கள் சலித்துப்போன நாட்காட்டியில்
குறித்து வைத்த திகதிகள்
ஊட்டிய நிறத்தை இழந்துகொண்டிருக்கின்றன.
வீடு திரும்புவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக
அம்மா மீளவும் ஒரு திகதியை அறிவித்திருக்கிறாள்.
யரோ ஒருவருடைய வீட்டில்
அவிந்துகொண்டிருக்கிறது எங்களுக்கான உணவு.
வெளியேறி வருவதற்கான
அம்மாவின் விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டதாக
அறிவிக்கப்பட்ட முதல் நாள் மாலை
அரிசியும் காய்கறிகளும் வாங்கி வைத்திருந்தேன்.

புழுதி படிந்து காலம் முடிந்த பேருந்துகள்
வந்துகொண்டிருக்கும் வழியால்
நகர மறுக்கிற பேரூந்தில் அம்மா வருகிறாள்.
இன்னும் வளராமல் இருக்கிற தலைமுடியை இழுத்துக்கட்டியபடி
தங்கை வருகிறாள்.
வெயில் தின்ற
அவர்களின் புன்னகையைப் பற்றி பாடிக்கொண்டிருக்கிறது
இந்த நகரம்.
நகரத்தின் வழிகள் பலவாறு பிரிந்து செல்கின்றன.
திகதிகள் கடந்து செல்ல
தொடர்ந்து காத்திருக்கும் அம்மாவை
அழைத்துக்கொண்டு வரும் பொழுது நகரமெங்கும்
அகதிப் பைகளை தூக்கியபடி
அடையாளத்தை உறுதி செய்துகொண்டு
காலச்சுமைகளை சுமந்தபடி
திரிகின்றனர் பெருநிலத்தின் சனங்கள்.

திரும்புவதற்கு ஒரு வீடு இல்லை என்பதையும்
கடிதம் வந்து சேருவதற்கு ஒரு முகவரி இல்லை என்பதையும்
அம்மா சொல்லிக்கொண்டிருக்கிறாள்.

முகவரியும் வீடுமற்று அலையும் அகதியாகி
யாரோ ஒருவருடைய வீட்டில்
வைத்து வரப்பட்ட உடுப்புப் பையை
நான் எடுத்து வருகிறேன் இன்னொரு வீட்டுக்கு.
வீட்டுக்கு வீடும்
தெருவுக்கு தெருவும்
அகதியாகி அலைந்துகொண்டிருக்கிறோம்.
ஒரு நகரத்திலிருந்து இன்னொரு நகத்திற்கு
வரும் பொழுது மீளவும் பெயர்ந்துகொண்டிருக்கிறேன்.
யாரோ ஒருவருடைய சட்டி பானையில் கொதித்துக்கொண்டிருக்கிறது
மதிய உணவு.
தூக்கிச் செல்லும் சுமை நிறைந்த பைகள் முதல்
எல்லாமே வார்த்தைகளை பகிர்ந்துகொண்டிருக்கின்றன.

அகதிகள் அலைந்து கொண்டிருக்கும் நகரத்தில்
வைத்து நிச்சயமாக வீடு திரும்பலாம்
என்றபடி அம்மா மீளவும் ஒரு திகதியை மாற்றிச் சொல்லுகிறாள்.
மாலை நேரமாய் அகதிகளை அள்ளிக்கொண்டு
புழுதியடிக்கப்பட்ட பேரூந்து
தடுப்பு முகாங்களை நோக்கி புறப்பட்டுச் செல்லுகின்றன.
__________________________________________________
(வவுனியா நகரத்தில் இருந்து) 16.02.2010

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010

பூங்காவில் உறங்கிச் செல்லுகிற வீடற்ற குழந்தைகள்


o தீபச்செல்வன் ------------------------------------------------------------------

தூக்கம் கண்களை நிறைத்த பொழுது
குழந்தைகள் இலவசமாக அனுமதிக்கப்படும்
பூங்காவுக்கு வருகின்றனர்.
கைகளை இழந்த சிறுவன் செயற்கை கைகளுக்காய்
மீதித் துண்டங்களால் ஏந்திக்கொண்டிருக்கிறான்.
கைகள் பற்றிய கனவுடன் அலைந்துகொண்டிருந்தான்.
சிதைக்கப்பட்ட முகத்தையும்
பிரித்தெடுக்கப்பட்ட கைகளின் மிகுதிப் பகுதியையும்
புகைப்படங்களாக்கி
உதவி கோரிக்கொண்டிருக்கிறான்.
எல்லாமே
எட்டாத தூரத்திலிருந்து தூங்கிக்கொண்டிருக்கிறது.
அந்தச் சிறுவன்
கைளோடு தன் புன்னகையையும் இழந்துபோயிருந்தான்.


பள்ளிக்கூடம் சென்ற ஒன்பது வயதுச் சிறுமி
மிருகங்களாகிய
படைகளால் வன்புணரப்படுகையில்
இந்தக் குழந்தைகள் வழியிலிருக்கும் பூங்காவில்
உறங்கிக்கொண்டிருக்கின்றனர்.
இரத்தம் கொட்டிப் படிந்துகொண்டிருக்கிறது
குழந்தைகளின் புத்தகம்.
இந்தக் குழந்தைகள்
ஐஸ்பழத்தை பார்த்து ஆசைப்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.
இரத்தம் சொட்டச் சொட்ட
பழங்களை தின்றுகொண்டிருக்கிறது காலம்.
அவர்கள் தமக்குள்ளாகவே
எல்லா மீறல்களையும் பகிர்ந்துகொண்டிருக்கின்றனர்.

குழந்தைககளிடமிருந்து பறித்தெடுக்கப்பட்டு
மிகப்பெரிய ஏற்பாட்டில்
பழுதாக்கப்பட்ட அவர்களின் உலகத்தை
மிகப்பெரிய செலவில்
பிய்த்தெறியப்பட்ட குழந்தைகளின் கனவுகளை
வைத்துப் பிய்த்துக்கொண்டிருக்கின்றன
பூங்காவில் தொடர்ந்து கதையளந்துகொண்டிருக்கும் குரங்குகள்.
வீடற்ற குழந்தைகள்
மாலையானதும் எங்கோ திரும்பிக்கொண்டிருக்கின்றனர்.

வீடற்ற குழந்தைகள்
எனக்கருகில் அன்றைய பகல் முழுவதும்
விளையாடிக்கொண்டிருந்தனர்.
அவர்கள் வைத்திருந்த
புது உலகத்திற்கான புன்னகையாலும் நம்பிக்கையாலும்
ஈரத்தாலும் விண்ணப்பங்களை நிரப்பிக்கொண்டிருந்தனர்.

குழந்தைகள் ஒரு நாள் முழுவதும்
அமர்ந்திருந்து எழுதி அனுப்பிய
விண்ணப்பங்களை
பழுதடைந்த புகையிரத வீதியில்
அவசர அவசரமாக
கழிவுகளோடு கழிவுகளாக எறியப்பட்டிருக்கிறது.
குழந்தைகள் கொண்டு வந்த புத்தகங்களிலிருந்து
இரத்தம் கசிந்துகொண்டிருப்பதை
கண்டு துடிக்கத் தொடங்குகின்றர் தாய்மார்கள்.
குழந்தைகள் உறங்கிச் சென்ற
பூங்காவின் மரங்கள் வாடி விழுந்து கொண்டிருக்கின்றன.
_______________________
மாசி 2010

சனி, 13 பிப்ரவரி, 2010

ரொட்டித் துண்டுகளை அவள் வெறுக்கிறாள்

o தீபச்செல்வன் ------------------------------------------------------------------

ரொட்டிகளை தூக்கி வைத்திருந்த குழந்தைகளிடமிருந்து
அவற்றை விலக்கும்படி கூறுகிறாள்.
உணவுக்கோப்பையை தூக்கும்பொழுதெல்லாம்
ரொட்டித்துண்டுகளே அவளின் முன்னால் விழுகின்றன.
குருதியுறியதும் ஊறைந்ததுமான
ரொட்டித்துண்டுகள் ஏப்பொழும் மணந்தபடியிருக்கின்றன.

அந்தப் பதுங்குகுழியை குருதியுறியபடி
அன்றிரவு முழுக்க கழிக்க வேண்டியிருந்தது.
குழந்தைகள் ரொட்டித்துண்டுகளுக்கு
ஆசைப்பட்டிருக்காது விட்டிருக்கலாம் என சொல்லுகிறாள் தாய்.
வெளியில் யாரும் செல்லவில்லை.
பதுங்குகுழியின் இரண்டாவது படியிலேயே
அடுப்பு எரிந்துகொண்டிருந்தது.
குழந்தைகள் பட்டினியால் துடித்து
உணவுக்காக காத்திருந்தார்கள்.
அம்மா ஒவ்வொரு ரொட்டிகளாக தட்டிக்கொண்டிருந்தாள்.

குழந்தைகள் முதல் ரொட்டி சுடப்படடு முடிந்ததும்
ஓவ்வொருவருக்காக கிடைத்துக்கொண்டிருந்தது.
அம்மாவுக்கான ரொட்டியே
தகரத்தில் வேகிக்கொண்டிருந்தது.
மிக இலகுவாக அந்த ரொட்டியையும் தகரத்தையும்
அப்பாவையும்
ஷெல் வந்து கிழித்துவிட்டது.
அம்மாவின் ரொட்டியை ஷெல் தின்றுவிட்டது.
அப்பாவின் குருதியால்
நனைத்து ஊறியப்போயிருந்தது அன்றிரவு.

எல்லோருடைய ரொட்டிகளிலும் குருதி பட்டுத் தெறித்தது.
யாரும் அறியாத அவளின் பசியையும்
ரொட்டி பற்றிய கதைகளையும் குழந்தைகள்
கேட்டு அதிர்ந்து போயினர்.
பல்வேறு வடிவிலான கதைகளை ரொட்டித்துண்டுகளில்
வாசித்த குழந்தைகள்
அவற்றை உண்ணாமலே வைத்து பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.
__________________________
12.11.2009

நன்றி: ஆதவன்   பெப்ரவரி

வியாழன், 4 பிப்ரவரி, 2010

தோற்கடிக்கப்பட்ட மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசன்

o தீபச்செல்வன் ------------------------------------------------------------------

நாங்கள் ஆதியிலேயே தோற்றுப்போயிருந்தோம்.
தன் அதிகாரம் மிகுந்த செயல்களுக்காக
நிராகரித்த சிறு மக்களை
அரசன்
தோற்கடித்து அரியனையில் ஏறியிருக்கிறான்.
மோசடிகளிலிருந்து அவன் பரிபூரண உருவத்தைப் பெற்றிருக்கிறான்.
நிரந்தராமாக முகங்கள் கருகிவிட்டன.
யார் வென்றார்கள்
யார் வீழ்ந்தார்கள் என்பதை
குழந்தைகள் அறிவிக்கத் தொடங்குகிறார்கள்.
எல்லா அரசர்களின் முன்பாகவும்
எல்லா வெற்றிகளின் முன்பாகவும்
முடிவுகளுக்கு முன்பாகவே நாம் தோற்றுப்போயிருக்கிறோம்.
எங்கள் வானம் வீழ்ந்து படுகிறது.

மோசடிகளால் செய்யப்பட்ட கதிரையில்
அரசன் அமர்ந்திருக்க
அஞ்சும் காலங்களிலிருந்து
மிக அஞ்சி ஒடுங்கி தீர்ந்துபோகும் நெருக்கடியான காலத்திற்குள்
கலைக்கப்படுகிறோம்.
இதுவும் சபிக்கப்பட்ட மாலையாக பதிந்திருக்கிறது.
வாக்குறுதிகளால் அழித்து முடிக்கப்பட்ட
ஒப்பந்தங்களால் கையாண்டு ஏமாற்றப்பட்ட
அதிகாரத்தின் போட்டியில்
வாழ்வு கிழித்தெறியப்பட்டிருக்கிறது.

எல்லாவற்றுக்காகவும் அவனிடம்
மண்டியிடப்போகிறோம்.
குரல்களை தின்றவன் எங்களுக்காக பாடுகிறான்.
சொற்களை செவிமடுக்க மறுத்தவன்
நாளை சொற்களை அள்ளி வீசப்போகிறான்.
திரும்பவும் புன்னகைக்கப்போகிறான்.
நமது மொழியிலேயே நம்மைச் சபிக்கப்போகிறான்.
முளைக்க வேண்டிய பயிர்கள் பறிபோய்விட்டன.
விளையும் காலம் அவனால் தின்னப்பட்டிருக்கிறது.

சனங்கள் ஆதியிலிருந்து தோற்று வருகிறார்கள்.
வீழ்ந்த சந்ததியிலிருந்து
எதைத் தன்னும் நேர்மையுடன் செய்ய சின்ன இடைவெளியுமில்லை.
நமது தெருவுக்கும் முற்றத்திற்கும்
அவனிடம் கெஞ்ச வேண்டியிருக்கிறது.
நாம் வாழ அவனுக்கு பிரதிபலனளிக்க வேண்டியிருக்கிறது.
முதலில் நாங்கள் எங்களுக்குள்
பெரிய தோல்வியைச் சந்திருந்தோம்.
அதன் பிறகு தொடர்ந்து அவர்களிடம் தோற்றுக்கொண்டிருக்கிறோம்.
திசைகளும் கணங்களும் சொற்களும் மனங்களும்
வெளிகளும் துளைகளும்
வேறுவேறாக பலியிடப்படுகின்றன.

அவனால் தீர்மானிக்கப்படுகிறது காலம்.
அரசனின் மேய்ச்சல் வெளியில்
திசைகளற்றதும் பட்டியகளற்றதுமான
ஆடுகளாக அலைந்துகொண்டிருக்கிறோம்.
சொற்களைத் தடுத்து வாயைக் கட்டி விட்டிருக்கிறான்.
இன்று யாரே வென்றிருக்கிறார்கள்
யாரோ தோற்றிருக்கிறார்கள்.
காலத்தை நிரந்தரமாய் இழந்து குழந்தைகள் தொடர்ந்து ஏமாற்றப்படுகிறார்கள்.
தோல்வி நம்மிடம் ஆதியிலிருந்து வருகிறது.
________________________
28.01.2010

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...