Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

வியாழன், 21 ஆகஸ்ட், 2008

போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

----------------------------------------------------------------
கவிதை:தீபச்செல்வன்
_______________________________
01
போராளிகள் மடுவைவிட்டு
பின் வாங்கினர்.

நஞ்சூறிய உணவை
தின்ற
குழந்தைகளின் கனவில்
நிரம்பியிருந்த
இராணுவ நடவடிக்கைகளிலிருந்து
போர் தொடங்குகிறது.

நகர முடியாத இடைஞ்சலில்
நிகழ்ந்து
வருகிற
எண்ணிக்கையற்ற
இடப்பெயர்வுகளில்
கைதவறிய
உடுப்புப்பெட்டிகளை விட்டு
மரங்களுடன்
ஒதுங்கியிருக்கின்றன சனங்கள்.

போர் இன்னும் தொடங்கவில்லை.

02
போராளிகள் இலுப்பைக்கடவையைவிட்டு
பின் வாங்கினர்.

பயங்கரவாதிகளை
துரத்திக்கொண்டு வருகிறது
அரச யுத்தம்.

மரத்தின் கீழ்
தடிக்கூரைகளில்
வழிந்த
மழையின் இரவுடன்
சில பிள்ளைகள்
போர்க்களம் சென்றனர்.

யுத்தம் திணிக்கப்பட்டதை
பிள்ளைகள்
அறிந்தபோது
பரீட்சைத்தாள்கள்
கைதவறிப் பறந்தன.

ஓவ்வொரு தெருக்கரை
மரத்தடியிலும்
காய்ந்த
உணவுக்கோப்பைகளையும்
சுற்றிக்கட்டியிருந்த
சீலைகளையும்
இழந்த போது
ஜனாதிபதியின்
வெற்றி அறிக்கை
வெளியிடப்பட்டிருந்தது.

03
போராளிகள் விடத்தல்தீவை விட்டு
பின்வாங்கினர்.

யுத்த விமானங்களிடமிருந்து
துண்டுப்பிரசுரங்கள்
வீசப்பட்ட பொழுது
வறுத்த
கச்சான்களை தின்கிற
கனவிலிருந்த சிறுவர்கள்
திடுக்கிட்டு எழும்பினர்.

எல்லோரும் போர்பற்றி
அறியவேண்டி இருந்தது.

04
போராளிகள் முழங்காவிலை விட்டு
பின்வாங்கினர்.

கைப்பற்றப்பட்ட கிராமங்களை
சிதைத்து எடுத்த
புகைப்பபடங்களை
வெளியிடும்
அரச பாதுகாப்பு இணையதளத்தில்
சிதைந்த
தென்னைமரங்களைக் கண்டோம்
உடைந்த
சமையல் பாத்திரங்களைக் கண்டோம்
தனியே கிடக்கும்
கல்லறைகளை கண்டோம்.

யுத்தம் எல்லாவற்றையும்
துரத்தியும்
எல்லாவற்றிலும் புகுந்துமிருந்தது.

05
மல்லாவியையும்
துணுக்காயையும் விட்டு
சனங்கள் துரத்தப்பட்டனர்.

ஒரு கோயிலை கைப்பற்ற
யுத்தம் தொடங்கியபோது
வணங்குவதற்கு
கைகளையும்
பிரார்த்தனைகளையும்
இழந்தோம்.

அரசு அகதிமுகாங்களை திறந்தது.

இனி
மழைபெய்யத்தொடங்க
தடிகளின் கீழே
நனையக் காத்திருக்கிறோம்
தடிகளும் நாங்களும்
வெள்ளத்தில்
மிதக்கக் காத்திருக்கிறோம்.

வவுனிக்குளத்தின் கட்டுகள்
சிதைந்து போனது.

கிளிநொச்சி
அகதி நகரமாகிறது
இனி
பாலியாறு
பெருக்கெடுத்து பாயத்தொடங்கும்.

நஞ்சூறிய உணவை
தின்ற
குழந்தைகளின் கனவில்
நிரம்பியிருந்த
இராணுவ நடவடிக்கைகளிலிருந்து
போர் தொடங்குகிறது.
---------------------------------------------------------------
20.08.2008
-------------------------------------------------------------------------

துண்டிக்கப்பட்ட சொற்கள்

----------------------------------------------------------------
கவிதை:தீபச்செல்வன்
_______________________________
01
தோல்வியின் வர்ணிப்பு நிரம்பிய
உனது குரல்
எனக்குக் கேட்க வேண்டாம்

துண்டிக்கப்பட்ட
தொலைபேசிகளிலிருந்து
எனது நகரத்தின்
கண்ணீர் வடிகிறது

கம்பிகளின் ஊடாய்
புறப்பட முயன்ற
எனது சொற்கள்
தவறி விழுகின்றன

மேலும்
தோல்வி வருணிக்கப்பட்டு வரும்
உனது குரல்
எனக்குக் கேட்க வேண்டாம்.

02
உனது கடிதம்
வந்து
சேராமலிருந்திருக்கலாம்
நீ
எந்தக் கடிதத்தையுமே
எழுதாமல் விட்டிருக்கலாம்

தபாலுறை
நாலாய்க் கிழிந்திருந்தது
முகவரிகளில்
இராணுவம் முன்னேறிய
குறியீடுகள் இருந்தன

நான் தேடி அலைந்தேன்
கடிதம் எங்கும்
வெட்டி மறைக்கப்பட்டிருந்த
உன்னையும்
உனது சொற்களையும்.

மறைக்கப்பட்டிருந்த
உனது சொற்களுக்கு கீழாய்
உனது முகம் நசிந்து கிடக்க
தோல்வி வருணிக்கப்பட்டிருந்தது.
------------------------------------------

வியாழன், 14 ஆகஸ்ட், 2008

கிராமங்களை விட்டு வெளியேறியவர்களின் பாடல்கள்


தானியங்கள் வீடுகளில் நிரம்பிக்கிடக்கின்றன
வீடுகள் நிரம்பிய கிராமங்களைவிட்டு
நாங்கள்
வெளியேறிக்கொண்டிருக்கிறோம்.

துயரத்தின் பாதைகள்
பிரிந்து நீள்கின்றன
எல்லா பாதைகளும்
தலையில்
பொதிகளை சுமந்திருக்கின்றன.

எல்லோரும் ஒருமுறை
நமது கிராமங்களை
திரும்பிப்பாருங்கள்
இப்பொழுதே
தின்னைகள் சிதைந்துவிட்டன
வீடுகள் வேரோடு அழிந்து விட்டன.

ஒரு துண்டு நிலவுதானே
வானத்தில் எஞ்சியிருக்கிறது
அடர்ந்த மரங்களுக்கிடையில்
காடுகள் வரைந்த வீதிகளில்
நாங்கள் எங்கு போகிறோம்.

எனது அம்மாவும்
ஏதோ ஒரு வழியில்
போய்க்கொண்டிருக்கிறாள்.
நான் எங்காவது
அம்மாவை சந்திக்கலாம்.

எனது வயதிற்கும்
எனது உருவத்திற்கும் ஏற்ற
பொதி ஒன்றை  சுமந்திருக்கிறேன்
எனது அம்மாவும் தனக்கேற்ற
பொதி ஒன்றை சுமந்தே
போய்க்கொண்டிருக்கிறாள்.

இந்த பொதிகளை வைத்து
நாம் ஒரு வாழ்வை
தொடங்கப்போகிறோம்
எங்கள் வானம்
பறிக்கப்பட்டு விட்டது
எங்கள் நட்சத்திரங்கள்
பறிக்கப்பட்டு விட்டன.

செல்கள் முற்றங்களை மேய்கின்றன
முற்றங்கள் சிதைந்து மணக்கின்றன
விமானங்கள் வானங்களை பிய்க்கின்றன
கிராமங்களை தின்னுகின்றன
வீதிகளை இராணுவம் சூறையாடுகிறது.

எங்ள் கிராமங்களை
விடுவித்துக்கொண்டதாக
அரச வானொலி அறிவிக்கிறது.

இனி நாங்கள்
ஒரு துண்டு தரப்பாலுக்கு
திரியப்போகிறோம்
ஒரு மரத்தை தேடி
அலையப்போகிறோம்.

உற்றுப்பாருங்கள் . . .
இங்கு இரவாயிருக்கிறது.

நாங்கள் கறுப்பு மனிதர்கள்
கறுப்பு பொதிகளை
சுமந்தபடி
நிழல் வீடுகளை
பறிகொடுத்து விட்டு
சிறுதுண்டு நிழலுக்காக
எங்கோ போய்க்கொண்டிருக்கிறோம்.
0

24.09.2007
 

சனி, 2 ஆகஸ்ட், 2008

மிதந்து திரியும் திறப்புகள்

கவிதை_____________________________
--------------------------தீபச்செல்வன்

------------------------------------------------------------------
சில சைக்கிள்களின்
கான்டிலை
கழற்றி எடுத்தார்கள்
சில சைக்கிள்களின்
சீற்றை
கழற்றி எடுத்தார்கள்
சில சைக்கிள்களின்
கரியலை
கழற்றி எடுத்தார்கள்.

சைக்கிள்களின் சொந்தக்காரர்கள்
திரும்புவார்கள் என்ற நம்பிக்கை
யாரிடமுமில்லை.

சில பேர் சைக்கிளையே
திருடிக்கொண்டு போனார்கள்.

அலுமாரிகளை உடைத்து
புதையலை கண்டெடுப்பதுபோல
எனது தோழர்கள்
மகிழ்கிறார்கள்
அவர்களின் வாசனை செண்டுகளும்
பவுடரும்
சீப்புகளும் இன்னும்
வாசனையுடனிருந்தன.

உடுப்புகளை கிழறி
அறையில் எறிந்து விட்டனர்
சிலர் அந்த உடுப்புகளால்
அறையின் தூசியை
தட்டிக்கொண்டார்கள்
கடைசியில்
குப்பைத்தொட்டியில்
நிரம்பியிருந்தன அந்த உடைகள்.

அடிப்பகுதி கழன்ற சப்பாத்துக்களும்
உருக்குலைந்த செருப்புகளும்
அறையை விட்டு
ஒதுங்கியபடியிருந்தது.

பாடக்குறிப்புகள் கிழிந்தும்
உருக்குலைந்தும்
அள்ளி வீசப்பட்டும்
காற்றோடும்
கால்ளோடும் மிதிபட்டும்
குப்பையாகி கரைந்தன.

அவர்கள் எழுதிய
பாடக்குறிப்புகளும்
சேகரித்த
பத்திரிகை பகுதிகளும்
அடிமட்டங்களும்
மை இறுகிய பேனாக்களும்
சிப்புகள் அறுந்த
ப்பாக்குகளை விட்டு
தூரக்கிடக்க
அலுமாரிகளை விட்டு
தூரக்கிடந்தன
அந்த தூசி படிந்த ப்பாக்குகள்.

அறைகளின் மூலைகள்
பக்கங்கள்
எங்கும் கிடந்து உருண்டன
அவர்களிடமிருந்து
உதிர்ந்த முடிகள்
தலையணைகள்
வேலி ஓரமாய் எறிந்து கிடந்தன.

குளியலறை தட்டுகளில்
கிடந்தன
ஈரம் உலராத சவர்க்காரங்கள்
மலஅறையில்
வெண்கட்டியால் எழுதப்பட்ட
தூஷனங்கள்
தண்ணீரால் கழுவி
அழிக்கப்பட்டிருந்தது.

முகம் அழியாத கண்ணாடியுடன்
பெயரும் ஊரும் வகுப்பும்
எழுதப்பட்ட சுவர்களுக்கு
வெளுறிய வண்ணம் பூசப்பட்டிருந்தது.

அவர்களின் பொருட்களில் ஏக்கம் வழிகிறது
பெரும் ஆறாய்
யாரும் கண்டுகொள்ளாத
கரைகளை எடுத்து உடைத்தபடி..

அவர்கள் புதிய சைக்கிள்களோடும்
புதிய ப்பாக்குகளோடும்
திரும்பி வருவார்கள்
என்ற நம்பிக்கை யாருக்குமில்லை.

சிதறுப்பட்டு கலைந்து
மிதக்கிற
அவர்களின் கனவின் ஏக்கங்களைப்போல
சைக்கிள்களினதும்
அறைகளினதும்
துருப்பிடித்த திறப்புகள்
எங்கும் அலைந்து
மிதந்து கொண்டிருந்தன..
01.04.2008
--------------------------------------------------------------

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...